Sunday, September 23, 2007

வானவில்லோ நீ?


அன்புள்ள திவ்யா....

என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?

உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.

அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!

காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்.... அந்தக் கண்களை இனி என்று பார்ப்பேன் கண்ணே!

பிள்ளை மனம்கொண்டவள் நீ....என்னை பிரிந்துவிட்டு மெளனமாய் இருக்க
உன்னால் எப்படி முடிகிறது திவ்யா?

உன் பிரிவைக்கூட தாங்கி இருப்பேன் கண்ணே....அழாமல் நீ
பிரிந்திருந்தால்...

காலத்திற்கு நம் காதல் புரியவில்லை... காதலுக்கும் நம் அருமை தெரியவில்லல. நம்மை பிரித்து வேடிக்கை பார்க்கிறது.

உன்னோடு வாழமுடியாத என்னால் உன் நினைவுகளோடு வாழ
முடிகிறேதே....

பிரிந்த நாளில் நீ தந்த வார்த்தைகள் மட்டுமே
இன்று என் வாழ்க்கையின் கனத்தை மடிதாங்குகின்றன.

காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற
உன் ப்ரியமானவன்.

எழுதிய கடிதத்தை மீண்டுமொரு முறை படித்துவிட்டு அதனுடன் ரோஜாப்பூவொன்றை சேர்த்து கீழ்வைத்தேன்

நீர்வழிகின்ற என் கண்களை வியப்புடன் பார்க்கும் என் மகளைக்
கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்
கல்லறைத்தோட்டத்தைவிட்டு.

9 Comments:

காஞ்சனை said...

கவிதையின் வார்த்தைகள்.

சகாரா.

Girl of Destiny said...

மிக மிக அழகான எதிர்பாராத முடிவு!
அற்புதமான கதை. எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு!

சோ.மஹாலெட்சுமி said...

கதை நல்லா இருக்குங்க‌..

ஒரு குழந்தை பெத்தும், தன் காதலியின் காதலினால்தான் தன் வாழ்க்கையே ஓடுகிறது என்று கதாநாயகன் சொல்லும் போது திவ்யாவை நினைச்சு நான் உண்மையிலே பெருமைப்பட்டேங்க..

நம்ப ஊரு பொண்ணுங்களைப் பொறுத்தவரை என்னதான் ஆண் ஆதிக்கம், அது இதுன்னு ஆண்களைப் பற்றி குறை சொல்லி வெறுத்தாலும், தனக்குரிய ஆணின் மனதில் உண்மையான‌, ஆழமான முதல் காதலாவோ அல்லது கடைசி காதலாவோ அல்லது முதல் மற்றும் கடைசி காதலா இருக்கணும்ங்கிற possessiveness ரொம்ப அதிகமாக இருக்கும்..
ஆனா அது முழுமையா கிடைக்கிறதுங்கிறது ரொம்ப பெரிய கஷ்டம்... ரொம்ப போராடணும், அதற்கெல்லாம் குடுப்பினை வேணும்.. இப்படியெல்லாம் பல பெண்கள் கூற நான் கேட்டுருக்கேன்.. இந்த விஷயத்தில் திவ்யா ரொம்ப குடுத்து வச்சவளா தெரியிறாங்க..
எனக்குள்ள‌ ஒரு சின்ன சந்தேக கேள்வி..
கதாநாயகனின் குழந்தை பெயர் 'திவ்யா'வா..?..

நிலா said...

வாவ் வாவ் அருமை மாமா.

Raghavan alias Saravanan M said...

நிலாரசிகன்,

இது என் முதல்வருகை மற்றும் பின்னூட்டம்.

எல்லாக் கதைகளயும் படித்துவிட்டு, மொத்தமாகப் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். ஆனால் இந்தக் கதை என்னை மாற்றிக்கொள்ள வைத்துவிட்டது.

இதில் என்னுடைய கோணம், "திவ்யா கதைநாயகனின் மனைவியாக இருக்கலாம்" என்பது. ஊகம் சரியா?

"உன் பிரிவைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும். நீ அழாமல் பிரிந்து இருந்தால்" - இது உங்கள் ஆரம்ப காலக் கவிதைகளில் ஒன்று. சரியா?

நல்லா எழுதறீங்க தோழரே.

மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

நக்கீரன் said...

கதைகள் நன்றாக உள்ளன.முடிவுகள் அழகு.தொடர்ந்து எழுதுங்கள்

நாணல் said...

"காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற
உன் ப்ரியமானவன்"

வரிகள் அருமை.

இதுவரை உங்கள் கவிதைகளை மின்னஞ்சலில் மட்டுமே படித்திருக்கிறேன். இன்று தான் உங்கள் வலைப் பதிவை பார்க்க நேர்ந்தது. கவிதைகளும் கதைகளும் தொடர என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இழந்த காதலியுடன் சேர்ந்து வாழ முடியாவிடிலும், அந்த காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை போன்றோர்க்கு இந்த கதை(கவிதை) ஓர் அருமருந்து.
நன்றி நிலா...

012 said...

very beautiful brother. I registered today daily i read ur web.