Sunday, June 7, 2009

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - [சிறுக‌தை போட்டிக்காக‌]





1.
என் பெய‌ர் நிலாக்குட்டி.ஆறாம் வ‌குப்பில் ப‌டிக்கிறேன்.
என்னுடன் படிக்கும் செல்வராஜின் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் செல்வராஜை சைக்கிளில் கூட்டிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுச்செல்வார். ந‌ளினியின் அப்பாவுக்கு அழ‌கே அவ‌ர‌து மீசைதான்.
க‌ருக‌ருவென்று அட‌ர்த்தியாக‌ இருக்கும் அந்த‌ மீசையை பார்த்தால் பாரதியாரின் மீசை மாதிரியே இருக்கும். பார்வதியின் அப்பா எங்க‌ள் ப‌ள்ளியில் ந‌ட‌க்கும் குண்டு எறித‌ல் போட்டியில் ப‌ரிசை த‌ட்டிச்செல்வார்.அவ‌ர‌து
வ‌ல‌துகையின் இறுகிய‌ த‌சைக‌ள் பார்க்கும்போதே பயத்தை வரவழைக்கும்.என் அப்பா எப்படி இருப்பார்?
செல்வராஜின் அப்பா மாதிரி என்னை சைக்கிளில் கொண்டுவிட வரமாட்டாரா? நளினியின் அப்பா மாதிரி அடர்ந்த மீசை வைத்திருப்பாரா? பார்வதி அப்பாவைப்போல சிறந்த வீரரா? அப்பாவைக்காணும் ஆசை
நாளுக்குநாள் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.




2.
"சாமி" கரும்பச்சை நிறத்தில் தன் வலது மார்பில் ப‌ட‌ர்ந்திருக்கும் எழுத்தை ஆசையோடு தொட்டுப்பார்த்துக்கொண்டாள் ராசாத்தி.சாமியின் மீது உள்ள ப்ரியத்தால் வலிக்க வலிக்க சந்தோஷமாக அவள் குத்திக்கொண்ட

பச்சை வெயிலில் மிளிர்ந்தபடி இருந்தது.டவுணிலிருக்கும் பிளாஸ்டிக் பூக்க‌ள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைபார்க்கிறாள் ராசாத்தி. ப‌த்தாம் வ‌குப்பிற்கு மேல் ப‌டிக்க‌ வ‌ச‌தி இல்லை என்ப‌தால் வேலை

செய்ய‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.வேலைக்கு சேர்ந்த‌ முத‌ல் நாளிலேயே அவ‌ளையும் அறியாம‌ல் அவ‌ன் பின்னால் ஓடிவிட்ட‌து ம‌ன‌சு.சூப்ப‌ர்வைச‌ராக‌ ப‌ணிபுரியும் அவ‌ன‌து காந்த‌ க‌ண்க‌ளில் இந்த‌க் க‌ருப்புக்காந்த‌ம்

ஒட்டிக்கொண்டுவிட்ட‌து. ராசாத்தி துறுதுறுவென்றிருப்பாள்.எப்போதும் குறும்பும்,சிரிப்புமாக‌ வ‌ல‌ம் வ‌ருப‌வ‌ள்.அவ‌ள‌து துடுக்கான‌ பேச்சில் க‌ள்ள‌த்தன‌மில்லாத‌ குழ‌ந்தைத்தனம் நிரம்பியிருக்கும்.


3.

தாம்பரத்தில் வந்து இறங்கியபோது எல்லாமே புதியதாக இருந்தது. சென்னை மொழியும், பிறர் மீது அக்கறை இல்லாத மக்களும்,விரைந்து செல்லும் விதவிதமான கார்களும் அவனுக்குள்

பிரமிப்பையும்,வெறுப்பையும் ஒருசேர உருவாக்கி இருந்தன. நாடார் கடையில் கடைப்பையனாக சேர்ந்த நாளிலிருந்து அந்த மளிகை கடையே அவனது வாழ்க்கையாகிப்போனது. சுறுசுறுப்பான அவனது வேலையை

கடைக்குப்பின்னாலிருந்த முதலாளியின் வீட்டில் இருகண்கள் ரசிக்க ஆரம்பித்தன. கடைமீது இருந்த பார்வையை அந்த கடைக்கண்பார்வை மீது இவன் திருப்பியபோது வாழ்க்கையே சொர்க்கமாகிப்போனது.
நல்ல நேர்மையான பையன் என்பதால் தன் ஒரே மகளை அவனுக்கே கட்டிவைத்து கடையை அவன் பேரில் எழுதி வைத்தார் முதலாளி. வெறும்பயலாக சென்னை வந்தவன் கடைக்கு சொந்தக்காரனாக
மாறி வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கி இருந்தான்.



4.

எத்தனையோ முறை அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். வெளியூரில் வேலை செய்கிறார் என்பதை தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. வீட்டிற்கே வராமல் அப்படி என்ன வேலை பார்க்கிறார் என்று அப்பாவை
நான் திட்டும்போதெல்லாம் அம்மா சொல்கிற ஒரே வாக்கியம் "அப்பா ரொம்ப நல்லவரு,அவர திட்டாத". நான் பிறந்தபோதாவது வெளியூரிலிருந்து என்னை பார்க்க வந்தாரா? என்னை கோவில் திருவிழாவிற்கு
கூட்டிச்சென்று கண்ணாடி வளையலும்,ஸ்டிக்கர் பொட்டும் வாங்கித்தரமாட்டாரா? விடைதெரியாத கேள்விகளுக்கு அம்மாவின் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது. அம்மாமேல் கோவமாக வந்தாலும் உலகிலேயே

எனக்கு பிடித்த நபர் அம்மாதான்.நான் என்ன கேட்டாலும் உடனே வாங்கித்தந்துவிடுவாள். அம்மாவைக் கட்டிபிடித்துக்கொண்டுதான் தினமும்

தூங்குவேன். தினமும் இரவு கதை சொல்லிதான் என்னை தூங்க வைப்பாள்.எங்கள் வீட்டுத்திண்ணையில் தையல் மிஷின் வைத்து சம்பாதிக்கிறாள்.எனக்கு விதவிதமான ஃப்ராக் தைத்து தருவாள்.ஒரே ஒரு அறை

கொண்ட சின்ன வீடுதான் எங்கள் வீடு.அதில் தடுப்பு வைத்து சமையல் செய்வாள் அம்மா.

5.

பச்சை தாவணியும்,இரட்டை ஜடையுமாக அவள் நடந்துவருகின்ற அழகில் சொக்கி நிற்பார்கள் இளவட்டங்கள். எத்தனையோபேர் ராசாத்தியை துரத்தினாலும் அவள் மனம் "சாமி"க்கு மட்டும்தான் என்று

தீர்மானித்துவிட்டாள். சாமியும் அவளும் பார்வையால் சில நாட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் சாமி அவளிடம் காதலை சொன்னபோது முதல்முறையாக வெட்கப்பட்டு குனிந்துகொண்டாள் ராசாத்தி..
இருவரும் நாளெல்லாம் மனம்விட்டு பேசிச்சிரித்தனர். ஊருக்கு சற்று வெளியே இருக்கும் வாழைத்தோட்டம்தான் இருவரும் சந்திக்கும் இடம். அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு வாழை இலைகளின் கிழிசல்வழியே

தெரிகின்ற நிலாவை பார்ப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் அவனிடம் கேட்டாள்

"உலகத்துலயே அழகானது நிலாதானய்யா?"

"இல்ல ராசாத்தி நிலாவ விட அழகான உன் முகந்தான்" என்றான் அவன்.

நாளுக்கு நாள் வளர்ந்த காதல் எல்லைமீறிய ஒரு தருணத்தில் ராசாத்தியின் உதடுகள் மட்டும் "எஞ்சாமி எஞ்சாமி" என்று முணுமுணுத்துக்கொண்டு தூரத்திலிருக்கும் நிலாவை
பார்த்துக்கொண்டே இருந்தன.


6.

பெண்குழந்தை பிறந்திருக்கிறது என்று நர்ஸ் சொன்னதும் சந்தோசத்தில் நர்சை கட்டிபிடிக்க ஓடினான்.அருகிலிருந்தவர்கள் இழுத்து பிடித்துக்கொண்டார்கள். குட்டி கண்கள்,சிறுவிரல்கள் உலகின் மிகச்சிறந்த அதிசயம்
குழந்தைதான். அம்மாவின் அருகிலிருந்த தொட்டிலில் கைகால்களை ஆட்டியபடி படுத்திருந்தது அந்த பட்டுக்குழந்தை. கொஞ்ச நேரம் குழந்தையையும் மனைவியும் மாறி மாறி பார்த்துவிட்டு வெளியில் வந்து

நின்றுகொண்டான்.இனி வருசமெல்லாம் வசந்தம் என்று கிளிஜோசியக்காரன் சொன்னது நினைவுக்கு வந்தது.

வாழ்க்கை செட்டிலாகியதில் லுங்கியும் சட்டையுமாக சென்னை வந்தவனின் கையில் தங்கபிரேஸ்லட்டும் கழுத்தில் எட்டு பவுன் செயினும் மினுமினுத்தன. வெறும் சாமியாக திரிந்தவன் வியாபாரிகள்
சங்கத்தலைவர் சாமிக்கண்ணாக‌ இப்போது மாறியிருந்தான்.


7.
அம்மா,பாட்டி,நான்,ஜில்லு நான்குபேரும்தான் இந்த வீட்டில்இருக்கிறோம். இந்த ஊரில் எங்களுக்கு சொந்தமென்று யாருமில்லை. பாட்டிக்கு வெத்தலையை மென்றுகொண்டே இருப்பதை தவிர வேறு எதுவும்
தெரியாது.காது சரியாக கேட்காது,கண்பார்வையும் கொஞ்சம் மந்தம். ஆனால் பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். பக்கத்தில் போகும்போதெல்லாம் இழுத்து மடியில் அமர்த்திக்கொள்வாள். சேலை முடிச்சிலிருந்து
எட்டணாவோ,ஒரு ரூபாயோ மிட்டாய் வாங்க தருவாள். வெத்தலைபோடும் பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால் பாட்டியின் மடியிலேயே தூங்கி விடுவேன். சொல்ல மறந்துவிட்டேனே ஜில்லு நான் வளர்க்கும்
பூனைக்குட்டி. எங்கள் வீட்டில் வெள்ளை நிறம் ஜில்லு மட்டும்தான். ஜில்லு சரியான தூங்குமூஞ்சி எப்பொழுதும் தூங்கி வழிந்துகொண்டே இருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் எங்கிருந்தாலும் ஒடி
வந்து என் கால்களை உரசிக்கொண்டு நெளிந்தபடி நிற்கும். வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் அம்மா,பாட்டி,ஜில்லு என்று மாற்றிமாற்றி யாரிடமாவது விளையாடிக்கொண்டு இருப்பேன்.எங்கள் வீட்டிற்கு பின்
கிணற்றடிக்கு அருகில் கொஞ்சம் ஆற்றுமணல் கொட்டி வைத்திருந்தாள் அம்மா. அதில் நானும் பக்கத்துவீட்டு அன்னபுஷ்பமும் விளையாடுவோம்.


8.

எல்லை மீறிய அன்பின் சாட்சியாக ராசாத்தியின் வயிறு வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்தது. வ‌யிற்றைக் க‌ண்ட நாளிலிருந்து சாமியைக் காணவில்லை. ராசாத்தியின் அம்மா எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தபோதும்
மெளனத்தை மட்டுமே பதிலாக்கிக்கொண்டிருந்தாள்.அவள் உத‌டுக‌ள் மெள‌னித்த‌போது ஊர்வாய் திற‌ந்துகொண்ட‌து. ந‌ட‌த்தை கெட்ட‌வ‌ள் என்று காறி உமிழ்ந்த‌து. எதையும் கேட்கின்ற‌ ம‌ன‌நிலையில் ராசாத்தி இல்லை.

சிரிப்பை மறந்தே போனது அவளது இதழ்கள். அதற்குமேல் அந்த ஊரில் இருக்கவேண்டாம் என்று நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் வேறொரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்கள் ராசாத்தியும் அவளது அம்மாவும்.

அம்மா அவனை பற்றி கேட்கும்போதெல்லாம் "கண்டிப்பா வந்துருவாக" என்பதுமட்டுமே ராசாத்தியின் பதிலாக இருந்தது.

9.

எதிர்வீட்டு முத்துப்பாண்டி அண்ணன் என்னை கூட்டிபோக பள்ளிக்கூடம் வந்தபோதே எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எதற்கு வீட்டிற்கு போகிறோம் என்று கேட்டுக்கொண்டே வந்தபோதும் எதுவும் சொல்லாமல்
அமைதியாக அவர் இருந்தது மேலும் பயமூட்டியது. வீட்டிற்கு நுழைந்ததும் பக்கத்து வீட்டு கனி அக்கா ஓடி வந்து என்னை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு "ஒன்னய விட்டுப்போக எப்படி அவளுக்கு மனசு

வந்துச்சோ
தெரியலையே யாத்தீ" என்று கதறினார். எனக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. கனி அக்காவிடமிருந்து விலகி ஓடிச்சென்று
பாட்டியை கட்டிபிடித்துக்கொண்டேன்.
ஓவென்று பாட்டி கதறிக்கொண்டு என்னை இறுக்க அணைத்துக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் கண்களில் நீர்வழிய நின்றுகொண்டிருந்தேன். கிணற்றிலிருந்து அம்மாவை வெளியே கொண்டு வந்து மர பெஞ்சில் கிடத்தினார்கள்.
தாம்பரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சாமிக்கண்ணுவிற்கு அவரது மனைவி இனிப்பு ஊட்டுகின்ற புகைப்படம் பாட்டியின் அருகில் கிடந்த செய்தித்தாளில் படபடத்துக்கொண்டிருந்தது.


-நிலாரசிகன்.

[உரையாடல்: சமூக கலை அமைப்பு சிறுகதை போட்டிக்காக எழுதியது]

Read More...

Wednesday, May 13, 2009

My Little Alien Friend - A Novel Review



[தமிழில் படிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே சொடுக்கவும்]

“My Little Alien Friend”, is a recent novel from the famous American lady writer “Chindli Foster”. Four years back, through her sensational novel “Sleeping with an Alien”, Chindli Foster created a great revolution in the English Novel history. When the announcement for this new novel came out, readers from all over the world were looking forward with high expectations.

Yesterday, the Novel was released by four in the evening. Thanks to the modern technology, I was lucky enough to get a copy around 4.30 PM as I had already registered through internet. Sitting in the park nearby, I started reading the 400 page Novel. After reading few pages, I thought it would be good idea to go home and read the novel to avoid any disruption in the flow. I positioned myself in my reading room and continued from 11th page. My mind was full of “Keno” and “Julie” when I finished reading that book at 7 this morning.

Seven years old Julie, loses her mother in a car accident. Julie’s father Williams, lives with her daughter in a farm house. Right from childhood, Julie is very brave and fears for nothing. She manages to be alone in the big house whenever her father goes out to the town market which is very far from their house to get the groceries, vegetables and other household items. There is no other neighborhood near that farm house. Mild sound from the horses and cows will be the only companionship for Julie when she is alone.

One fine day, Williams brings a small Labrador puppy to play with Julie. He gives a soft friendly look to Julie. With his broad head, drop ears, thick tapered tail and very dense coat in yellow, he attracts Julie. She calls him as “Milo”. With Milo, Julie lives in her own world. Within months, Milo becomes a grown Dog and now understands Julie’s commands. Julie treats Milo as her younger brother.

One day, Julie wakes up in the middle of the night to drink water and finds Milo missing in her bedroom. Both Williams and Julie searches for Milo but they couldn’t find Milo anywhere. Julie spends that night crying for Milo and slowly she goes to sleep. Early in the morning, she wakes up hearing mild cry from Milo. She sees the lawn through her bedroom window and gets excited to see Milo there. But Milo is bleeding profusely from the head and he is unconscious. Julie runs towards Milo and tries to lift him up to her bedroom to give first aid. She finds it very difficult to lift Grown up Milo.

To Julie’s surprise, she sees two additional helping hands to lift Milo. One small boy lifts Milo and takes him to Julie’s bedroom. He utters no word for any of Julie’s question and patiently waits for Julie to complete the first aid for Milo. He then falls asleep in Julie’s bed. Julie is in mixed emotions thinking about Milo’s return and this new boy who helped her. Julie runs to her father’s room and shares the good news on Milo’s return and tells him about this small boy sleeping in her bed.

Williams rushes to Julie’s room but he sees no one except Milo there. But Julie still sees the boy’s smiling face. She slowly realizes that he is visible only to her eyes. Williams thinks it would be a dream from her disturbed sleep last night. He kisses her daughter and asks her to take rest. He leaves for the market with heavy heart thinking about 2 days of solitude for Julie while he is away.

Julie offers her bread and Milk to the new friend. He finishes that in a fraction of second and demands for more. Julie calls him as “Keno”. Keno and Julie spends time together. Milo keeps on barking whenever he sees Keno. The two memorable days when Keno and Julie get to know each other while Williams is out of station has been well showcased by Chindli. When you read those 40 pages, it takes us to our own childhood days. Chindli writes that Julie’s mother smiles at Keno from the picture when Julie introduces her to Keno. For a moment, readers forget that Julie’s mom is dead. It feels as if she is alive and interacts with these Kids

In the Second chapter of the Novel, Julie is 18 years old high school girl. Young girl with blonde hair and bright blue eyes, Julie is the dream girl for every guy in that High school. Kevin, Julie’s classmate, falls in love with Julie and they both spend time together in almost all the activities they do.

For the summer vacation, Julie decides to visit her farm house. She kisses bye to Kevin and boards the flight. Farm house grabs full attention from Julie that she totally forgets to call her boyfriend. After waiting for two weeks, Kevin plans to come to the farm house and give surprise to Julie.

Kevin wide opens the gate with lot of excitement without any clue on the shock that is waiting to hit him. Julie is talking alone in that big house. Kevin hides himself trying to figure out the person on the other end. There is no one except Julie. But Julie is laughing aloud and playing like a small girl. He thinks for a while and captures Julie’s photo with his high-end digital camera. In the captured photo, he sees a small boy standing near Julie, playing with her.

Kevin rushes towards a tree outside that farm house. He realizes that he saw an Alien. His mind recollects the message he read in the newspaper regarding the cash award for the person who hands over the Alien to the Government. Suddenly, he hears a loud cry for help from Julie. He runs towards the House. Chindli breaks the suspense in the last 20 pages of the Novel.

Chindli Foster attracts the readers with her writings, creativity and the way she has captured the emotions of each and every character in this Novel. Julie’s mom would have died in the car accident and through out the novel, Julie will be closing the ears whenever she sees high speed car passing by.


Why Keno came to the earth? What happened to Julie? Who hit Milo on his head? What happened to Williams? – You will get answers for all these questions in the last 20 pages of the Novel. Chindli takes us to the different world altogether. One cannot close the book without reading the full Novel. Once you start reading the Novel, you will start laughing with keno and crying with Julie. The Novel ends with the following note

“Julie's eyes were filled with tears. Her lips were whispering something which he can only understand”

Price: 11.99$

Publications: Harper Kollins publications.

I felt so happy after writing this review. I cried out in joy that I will get the honor for being the first person to write a review for the Novel which might get published after 50 years and for which the writer itself is yet to born in this world. The time machine next to me started the count down to bring me back to the present world.

[Translated by SubhaShree]

Read More...

Wednesday, March 4, 2009

வால் பாண்டி சரித்திரம் - சிறுகதை


கால்சட்டை பை நிறைய கோலிக்காய்கள் ஜெயித்த சந்தோசத்துடன் வேகமாய் வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தேன். கோலிக்காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் சத்தம் சந்தோஷம் தருவதாய் இருந்தது.வீட்டை நெருங்கும்போதுதான் வேதக்கோவில் மணிச்சத்தம் ஆறுமுறை கேட்டது. ஆறுமணி தாண்டிய பின் வீட்டிற்குள் நுழைந்தால் அடி பின்னிவிடுவார் அப்பா. அடிவாங்குவது எனக்கு பழக்கமானதுதான்.ஆனாலும் வலிக்குமே?

வேகமாக லட்சுமி அக்காள் வீட்டிற்கு ஓடினேன்.எங்கள் வீட்டின் பின்புறம்தான் அவர் வீடிருக்கிறது. அவர் வீட்டு வேலியை தாண்டிக்குதித்தால் எங்கள் வீடு. அதன் பின் மெதுவாய் புறவாசல் வழி உள்நுழைந்துவிடலாம்.
மாட்டிற்கு புண்ணாக்குத்தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த லட்சுமி அக்கா என்னைப் பார்த்தவுடன் சத்தம்போட்டு கத்த ஆரம்பித்தார்.
"எலேய் பாண்டி! நெதமும் என் வீட்டு வேலிய பிரிச்சு பிரிச்சு திருட்டுத்தனமா வீட்டுக்கு போறியே ஒருநாளாவது வெளக்கு வைக்கிறதுக்கு முன்னால வீட்டுக்கு போயிருக்கியா? அப்படி என்னதான் வெளையாட்டோ! உங்கப்பன்கிட்ட சொல்லி உன் காலை ஒடைக்க.." அவர் முடிப்பதற்குள் நான் என் வீட்டுத் திண்ணையில் ஏழாம் வகுப்பு கணக்கு புத்தகத்துடன்
உட்கார்ந்திருந்தேன்.

திண்ணைக்கு பக்கத்தில் வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த ஜானி என்னைக் கண்டதும் வாலாட்டியது. ஜானி நான் வளர்க்கும் நாட்டுநாயின் பெயர்.(நாட்டு நாய்குட்டிபோல் தெருவில் சடைநாய்குட்டி கிடைப்பதில்லையே ஏன்?)
கணக்கு புத்தகத்தையும் ஜானியையும் பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லாம் ஜானியின் பெயரால் வந்த சிரிப்புதான். கணக்கில் எப்பொழுதும் பத்து மார்க்கை தாண்டியதில்லை என்பதால் என் பின்புறம் வலிக்க வலிக்க பிரம்பால் அடிப்பார் எங்கள் கணக்கு வாத்தியார். அவர் பெயரும் ஜானிதான். அவரை சங்கிலியால் கட்டமுடியவில்லை என்கிற
ஏக்கத்தில்தான் இந்த நாய்க்குட்டிக்கு ஜானி என்று பெயர் வைத்தேன்.

"குக்கூ குக்கூ" வீட்டிற்கு வெளியிலிருந்து சத்தம் கேட்டதில் திடுக்கிட்டேன். இது எங்களது சங்கேத சத்தம். என் நண்பர்கள் கார்த்தி,மைக்கேல் மற்றும் டேவிட்டுக்கு மட்டுமே தெரிந்த சத்தம். இந்த நேரத்தில் எதற்கு கூப்பிடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டே மெல்ல படலையை விலக்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்தேன். கார்த்தியும் டேவிட்டும் என்னை பார்த்தவுடன் ஓடிவந்தார்கள்.

"பாண்டி,நம்ம காம்பவுண்ட்காரர் வீட்டு பூவரசமரத்துல ஒரு அணில்கூடு இருந்துச்சுல்லா அதுல இருந்து அணில்குட்டி கத்துற சத்தம் கேக்குது. நீதான் வந்து எடுக்கணும்.மூணு குட்டி இருந்தா ஆளுக்கு ஒண்ணொன்னா எடுத்துட்டு போயி வளர்க்கலாம்.சீக்கிரம் வாயேன்" கண்கள் மின்ன சொன்னான் கார்த்தி. மரம் ஏறுவதில் நான் கில்லாடி என்பதால் என்னை தேடி
வந்திருந்தார்கள்.

"நமக்கு நாளைக்கு முழுப்பரிட்சை இருக்கே அணில் பிடிக்க போனா எங்க அப்பா வைய்வாருடா" வீட்டு வாசலை பார்த்தபடியே பதில் சொன்னேன்.
"பரிட்சை எழுதறதுக்கு முன்னாலயே மார்க்கு தெரியுற ஒரே ஆளு நீதாம்ல.எப்படியும் பத்துக்கு மேல எடுக்க போறதில்ல. அப்புறம் என்ன?" நக்கலாய் சிரித்தான் டேவிட்.
"மொகறகட்டையை பேத்துபுடுவேன்,முழுப்பரிட்சையில பெயிலானா அப்புறம் எட்டாப்புக்கு எப்படி போறது? உனக்கென்ன உங்க அய்யா கடை வச்சிருக்காரு,போயி பொட்டுக்கடல மடிக்க போயிருவ. எனக்குதான பிரச்சினை.அரையாண்டுல பெயிலானதுக்கே மூணு நாளு கல் உப்புல முழங்கால் போட வச்சுட்டாரு எங்கப்பா. முழுப்பரிட்சையிலயும் பெயிலான முதுகு தோலை
உரிச்சுபுடுவேன்னு சொல்லியிருக்காரு,நான் வரல ஆள விடுங்க" சொல்லிவிட்டு வீட்டுத்திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

மீண்டும் பத்து நிமிடத்திற்கு "குக்கூ" கேட்டுக்கொண்டிருந்தது. அதன்பின் வேப்பங்கொட்டையால் திண்ணை நோக்கி
எறிந்துவிட்டு போய்விட்டார்கள் இருவரும். அப்பா எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தார். செருப்பை மாட்டியவர் என்னை பார்த்துக்கொண்டே அம்மாவிடம் கேட்டார் "இவனை படிக்க வைக்கிறதுக்கு பதில் நாலு எருமை வாங்கி மேய்க்க அனுப்பலாம்.முழியை பாரு..திருட்டுப்பய காடை வாங்கிட்டு வரச்சொன்னதுக்கு காக்கா வாங்குன பயதான இவன்" அம்மா ஏதோ சொல்லி சமாதானபடுத்தியபின் முணுமுணுத்துக்கொண்டே வெளியில் போனார் அப்பா.

அப்பாவுக்கு காடை கறி என்றால் கொள்ளை இஷ்டம். ஒருமுறை காடை வாங்க இருபது ருபாய்த்தாளை தந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாய் இருபது ரூபாய் நோட்டை பார்த்தேன். சரி எதற்கு அதை வீணாக்க வேண்டுமென்று கவுட்டையை எடுத்துக்கொண்டு இரண்டு காக்காவை தெறித்துவிட்டேன். யாருக்கும் தெரியாமல் கழுத்தை திருகி எறிந்துவிட்டு
தோலை உரித்து அம்மாவிடம் கொடுத்தேன். இன்னைக்குதான் காடை கறி அம்சமா இருக்கு என்றபடியே அப்பாவும் ஒரு பிடிபிடித்துவிட்டார். காக்காவின் உரித்த தோலை வீட்டிற்கு பின்புறம் கொய்யா மரத்தடியில் புதைத்திருந்தேன். என் வீட்டுச் சனியன் புசுக்குட்டி(பூனை) அதை தோண்டி வெளியில் எடுத்து என்னை காட்டிக்கொடுத்துவிட்டது.

கையிலிருந்த கணக்கு புத்தகம் காற்றில் படபடத்தபோது,"என்னை மடியில் வைத்துக்கொண்டு ஏதேதோ நினைக்கிறாயே" என்று சொல்வது போலிருந்தது. அதற்கு மேல் படிக்க விருப்பமில்லை. நண்பர்களிடம் வரமாட்டேன் என்று சொன்னாலும் மனசு
முழுக்க அணில்குட்டியை நினைத்துக்கொண்டே இருந்தது. புத்தகத்தை மூடி அழிக்கம்பி வழியாக வீட்டுக்குள் வைத்துவிட்டு ஓசை படாமல் எழுந்து வெளியே வந்தேன். ஒரே ஓட்டமாக காம்பவுண்ட்காரர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

கார்த்தியும் டேவிட்டும் என்னை
பார்த்தவுடன் சந்தோஷமாக ஓடிவந்தனர்.
"பாண்டி,நீ வருவன்னு தெரியும் அதான் இங்கேயே நிக்கிறோம். சீக்கிரமா சுவத்துல ஏறி மரத்துமேல ஏறிடு. காம்பவுண்ட்காரர் வீட்ல இல்ல. பஜாருல நின்னு பேசிக்கிட்டு இருக்காரு. வெரசா ஏறு" என்ற சொல்லிவிட்டு குனிந்து நின்றுகொண்டான் கார்த்தி.
அவன் முதுகில் ஏறி சுவற்றுக்கு தாவினேன். விறுவிறுவென்று பூவரச மரத்தில் ஏறி அணில்கூட்டை பிரித்தேன். கண்திறக்காத இரண்டு குட்டிகள் என் கை பட்டதும் "கீச்,கீச்" என்று சத்தம்போட ஆரம்பித்தது. மரத்திலிருந்து இறங்கும் போது இரண்டு பூவரச இலை பறித்துக்கொண்டு சுவற்றில் கால்வைத்து தரைக்கு வந்தேன்.

"சூப்பருடா,பாண்டி இரண்டு குட்டிதான இருக்கு இப்ப என்ன செய்ய?" மெதுவாய் காதோரம் கிசுகிசுத்தான் கார்த்தி.
அணில்குட்டிகளை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் டேவிட்.
கால்சட்டைக்குள் பறித்துவைத்திருந்த பூவரச இலையை எடுத்து இரண்டு பீப்பீ செய்து டேவிட்டின் கைகளில் கொடுத்தேன்.
"எலேய் டேவிட்டு நக்கலா வுடுற நக்கலு? ஒனக்கு அணில்குட்டியும் கெடயாது ஒண்ணுங்கெடயாது. இந்தா இந்த பீப்பீயை ஊதிக்கிட்டே ஓடிரு" அவன் கைகளிலிருந்த அணில்கூட்டை பறித்துக்கொண்டு நடந்தோம் நானும் கார்த்தியும்.
"அணில்குட்டி இருக்குன்னு சத்தம்கேட்டு
சொன்னவன் நாந்தான். எனக்கு ஒரு குட்டி தாங்கடா" கொஞ்சநேரம் கெஞ்சிவிட்டு கிடைக்காததால் வழக்கம்போல் கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு "எழுதி வச்சுக்கல நீ பெயிலுதான்" என்று சாபம் தந்துவிட்டு
போய்விட்டான் டேவிட்.

"குட்டிக்கு நீ என்ன பேருல வைக்க போற?" வரும்வழியில் கேட்டான் கார்த்தி.
"ராமருக்கு உதவிசெஞ்ச நல்ல பிராணியில்லா, அதனால நல்ல பேராதான் வைக்கணும்...ம்ம்ம்... பாண்டின்னு வச்சுறலாமா? ஏன்னா உலகத்துலேயே நல்லவன் பாண்டி ஒருத்தன் தான..என்ன சொல்ற?" சிரித்துக்கொண்டே கேட்டேன்.
"என் குட்டியை கொடு" என்றவன் என்னிடமிருந்து ஒரு குட்டியை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரம் சென்றான். பின் திரும்பி "எலேய் பாண்டி! ராமருக்கு அதிகமா உதவி செஞ்சது குரங்குதான் அப்போ நீ குரங்குதானா?..ஹாஹா" பழிப்புக்காட்டிவிட்டு ஓடியே போய்விட்டான்.

உலகிலேயே எனக்கு பிடிக்காத ஒரே விலங்கு குரங்குதான். அதற்கும் காரணமிருக்கிறது. எங்கள் பள்ளியில் எல்லோரும் பயந்து நடுங்கும் ஒரே வாத்தியார் எங்கள் பி.டி. வாத்தியார் ராமர்தான்.
காலையில் ஸ்டடி ஹவரில் கையில் நீண்ட செங்கோட்டை பிரம்புடன் வலம் வருவார். அமைதியாக படிக்காமல் யாராவது பேசிக்கொண்டிருந்தால் வகுப்புக்கு வெளியே அழைத்து சுவற்றை பிடித்துக்கொள்ள சொல்வார். ஆறாம் வகுப்பு சேர்ந்த புதிதில்
ஒருநாள் வசமாக சிக்கினேன் நான்.
"ஸ்டடி அவர்ல படிக்காம பேசிகிட்டே இருக்க,இங்க வந்து சுவத்தை பிடில" பிரம்பை உருட்டியபடியே கேட்டார்.
எதற்காக சுவற்றை பிடிக்கவேண்டும் என்று அப்போது எனக்கு தெரியாது. வெறும் சுவற்றிலேயே விறுவிறுவென்று ஏறும் சிங்கம் நான் என்று நினைத்துக்கொண்டே சுவற்றை பிடித்து நின்றேன். "மடார்,மடார்" என்று சத்தம் வர வர என் பின்புறத்தில் அடி பின்னி எடுத்துவிட்டார். வலி உயிர்போனது. கண்ணீருடன் என் இடத்தில் வந்து உட்கார்ந்தேன். வகுப்பு மொத்தமும்
சிரித்துக்கொண்டிருந்தது. இரக்கமே இல்லாத மனசுடன் அவர் அடித்ததால் அவருக்கு "கல்ராமர்" என்று பெயர் வைத்துவிட்டேன். காட்டுத்தீபோல் எங்கள் பள்ளி முழுவதும் அந்தப் பெயர் பரவி விட்டது. நான் தான் பெயர் வைத்தேன் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டவர் அஸெம்ப்ளி நடந்து முடிந்தவுடன் மைக்கில் என்னை கூப்பிட்டார். எனக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. குனிந்துகொண்டே அவர் முன்னால் போய் நின்றேன். மொத்த பள்ளியும் என்னை
பார்த்துக்கொண்டிருந்தது.

"மாணவர்களே ராமருக்கு கல்லை எடுத்து பாலம் கட்ட உதவிய விலங்கின் பெயர் என்ன?" மைக்கில் கேட்டார் கல்ராமர்.
மொத்த பள்ளியும் "குரங்கு" என்றது. இப்படித்தான் பால்பாண்டியாக வீரநடை போட்ட என் பெயர் வால் பாண்டியாக
மாறிப்போனது. அன்றிலிருந்து குரங்கை தவிர எல்லா விலங்கையும் நேசிக்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்குள் நுழைந்து மாட்டுக்காடியில் கிடந்த நார்பெட்டியில் அணில்குட்டியை வைத்து மூடிவிட்டு திண்ணைக்கு வந்து உட்கார்ந்துகொண்டேன்.

பரிட்சை முடிவு வெளியான அன்று என் துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள் அம்மா. வீட்டு முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் அப்பா. அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன. தூணுக்கு பின் தலை குனிந்து நின்றிருந்தேன் நான். அப்பா பேச ஆரம்பித்தார் "எத்தன தடவ சொல்லி இருப்பேன் படி படின்னு...எப்ப பாரு நாயி,அணிலு,குருவின்னு கவுட்டையை எடுத்துக்கிட்டு அலையவேண்டியது..ஒரு நாளாவது படிச்சு பாத்திருக்கியா உம்புள்ளைய? இனியும் இந்த ஊர் ஸ்கூலும் சரிப்படாது இந்த ஊரும் சரிப்படாது. பேசாம தட்டப்பாறையில கொண்டு போயி
போர்டிங்ல சேத்துர வேண்டியதுதான். அப்பதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்" அம்மாவிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு என் கைகளை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார் அப்பா.

அந்த டேவிட் பய சாபம் கொடுத்ததாலதான் பெயிலாகிட்டேன்னு அப்பாகிட்ட சொல்ல நெனச்சேன்,ஆனா இந்த பால்பாண்டியோட பெருமை புது ஸ்கூலுக்கும் புது ஊருக்கும் தெரியணுங்கற ஆசையில எதுவும் சொல்லாம கால்சட்டைக்குள்ள வச்சிருந்த கடலை உருண்டையை எடுத்து கடிச்சுக்கிட்டே வீரன் மாதிரி நடக்க ஆரம்பிச்சேன்.

-நிலாரசிகன்.

Read More...

Sunday, February 15, 2009

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு - சிறுகதை


சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே
புரிந்துவிட்டது.இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.நிஜமான
புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில்
வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து
இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி
சென்றுகொண்டிருக்கிறது ஆட்டோ. ஆட்டோவின் உட்புற கண்ணாடியில் பிள்ளையார்
படமொன்று ஒட்டியிருந்தது. முகத்தை திருப்பிக்கொண்டேன்.
பிள்ளையார்மீது கோபமில்லை. தன் மீது நம்பிக்கையில்லாதவனின் வழிபாடுதான்
கடவுள் என்கிற எண்ணம் எப்போதும் எனக்குண்டு.

நண்பன் வசிக்கும் முதல் மாடி வழக்கம்போலவே பேச்சிலர் அறைக்கான எல்லா
தகுதிகளோடுமிருந்தது. ஒருமுறை கிராமத்து வீட்டின் ஞாபகம் வந்து சென்றது.
வலது கால் எடுத்துவைத்து உள்நுழைந்தேன். போர்வைக்குள்ளிருந்து தலை
தூக்கியவன் "வா மாப்ளே" என்று வரவேற்றுவிட்டு போர்வைக்குள் மீண்டும்
சுருண்டு கொண்டான்.முதல் நாள் என்பதால் அலுவலகத்திற்கு செல்ல புது
உடையணிந்து மாடியிலிருந்து கீழ் இறங்கினேன். கீழ்வீட்டை கடக்க
முற்படும்போது திடீரென்று உடல் முழுவதும் சிலிர்க்க வைத்தது பின்னாலிருந்து
உடலை ஈரமாக்கிய தண்ணீர். திடுக்கிட்டு திரும்பினேன் வலதுகையில் வாளியும் இடது
கையை இடுப்பிலும் வைத்தபடி என்னை பார்த்து சிரித்தாள் சிறுமி ஒருத்தி.

கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஓடிச்சென்று அவளை பிடிப்பதற்குள்
வீட்டிற்குள் ஓடி ஓளிந்துகொண்டாள். மீண்டும் மாடி ஏறி உடை மாற்றி கீழே
வந்தேன். வீட்டு வாசலில் நின்றுகொண்டு சிரித்தபடி கேட்டாள் "திரும்பவும்
தண்ணீ ஊத்தட்டுமா?"
"அடிபிச்சுடுவேன்" என்றவாறு கையை ஓங்கினேன்.

"வவ்வ வவ்வே" பழிப்புக்காட்டிவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.
ஆரம்பமே அசத்தல்தான் என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.

முதல் நாள் அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் மொட்டைமாடி சென்று காலை
கொடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கும்போது அந்தச்சிறுமியின் முகம்
ஞாபகம் வந்தது. ஓங்கி தலையில் கொட்டியிருக்கவேண்டும்.

மறுநாள் மாடியிலிருந்து கீழ் இறங்கும்போது என்னை அறியாமல் பயம்
தொற்றிக்கொண்டது. இன்றும் அந்த வானரம் தண்ணீர் ஊற்றிவிடுமோ? பூனைபோல்
அடிமேல் அடியெடுத்து இறங்கி கேட்டை திறக்க நெருங்கினேன்.

"ஹைய்யா இன்னிக்கும் மாட்டிகிட்டியா" பின்னாலிருந்து சத்தம் கேட்டு
சுதாரிப்பதற்குள் உடலை நனைத்துவிட்டது தண்ணீர். ஆத்திரம் பொத்துக்கொண்டு
வந்தது. வேகமாக சென்று பிடிப்பதற்குள் வீட்டிற்குள் சென்று கதவை
மூடிவிட்டாள். விடாமல் தொடர்ந்து காலிங் பெல்லை அழுத்தினேன். ஜன்னல்
வழியே பழிப்பு காட்டிச் சிரித்தாள்.

தினமும் இவளிடமிருந்து தப்பித்து வெளியே செல்வதற்கு பேசாமல் குளிக்காமல்
இருந்துவிடலாம். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதிருந்த கோபம் குறைந்து அவளின்
குறும்பை ரசிக்க ஆரம்பித்தது மனம்.

"உன் பேர் என்ன குட்டி?" தண்ணீர் வாளியுடன் நின்றவளிடம் நானாக சென்று
பேசியவுடன் ஆச்சரியம் தாளாமல் என்னை பார்த்தாள்.

"குட்டியா? நான் நல்ல உயரம்,உன் பேர் என்ன?" என்னிடம் கேட்டாள் வாளியை
கீழே வைத்தபடி.

"என் பெயர் அருண்"

"அருண் ஐஸ்க்ரீம் ஓனர் நீதானா?" இதை எதிர்பார்க்கவிலை நான். வாலில்லா
குரங்குகுட்டி ப்ராக் போட்டு நிற்பது மாதிரி இருந்தது.
"என் பெயர் ப்ரியா"

"நைஸ் நேம்,என்ன படிக்கிற?

"போர்த் ஸ்டாண்டர்ட் ஏ செக் ஷன்"

"செக் ஷனோட சேர்த்துதான் சொல்லுவியா?"

"ஆமா ஏ செக் ஷன்லதான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ஸ் இருக்காங்க"

"சரி டெய்லி தண்ணீ ஊத்துறியே ஏன்?"

"ச்சும்மா"

"இனிமே நாம ப்ரெண்ட்ஸ். என் மேல நீ தண்ணி ஊத்தக்கூடாது சரியா?" கையை நீட்டினேன்.

கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் "சரி நாம பிரண்ட்ஸ் இனி தண்ணீர்
ஊத்தமாட்டேன் அருண்னா". மனதிற்குள் சந்தேகம் பிறந்தது தண்ணீருக்கு பதில்
சாணித்தண்ணீ ஊத்திவிடுவாளோ என்று. வெளிக்காட்டிக்கொள்ளாமல் பை
சொல்லிவிட்டு அலுவலகம் சென்றேன்.

நகர வாழ்க்கை தினம் தினம் ஏதாவதொன்றை கற்றுத்தருகிறது. வெவ்வேறு
மனிதர்களை, மனித முகமூடிகளில் திரியும் மிருகங்களை,மின்சார ரயிலை போன்ற
வேகத்தை, நடுரோட்டில் அடிபட்டு துடிக்கும் நாயை பார்த்தும் பாராமல்
செல்கின்ற மனங்களை. சென்னைக்கு வந்து இருவாரம் ஓடிப்போனது. மாலை
வேளைகளில் மேல்மாடியிலிருக்கும் என் அறைக்கு வந்துவிடுவாள் ப்ரியா.
வீட்டைச் சுற்றிலும் பூத்திருக்கும் செவ்வந்தி,செம்பருத்தி,நந்தியா
வட்டை இன்னும்
பலவித பூக்களை பறித்துக்கொண்டுவந்து அறையின் நடுவிலிருக்கும் பூ
ஜாடியில் அழகாய் வைப்பாள். மடிக்காமல் சுருண்டு கிடக்கும் போர்வைகளை
மடித்தும், பாயை சுருட்டியும் ஓரமாய் எடுத்து வைப்பாள். எனக்கு
ஆச்சரியமாக இருக்கும், இந்தச் சிறிய வயதில் எப்படி வந்தது இந்த
பொறுப்புணர்ச்சி?

"உனக்கு யாரு குட்டி இதெல்லாம் சொல்லி தந்தா?"

"ஐய இதுகூட தெரியாதா எங்க டாடிக்கே நான் தான் சொல்லித்தந்தேன்" என்பாள்.
அவள் செய்ய வேண்டிய ஹோம்வொர்க் அனைத்தையும் என்னுடன் அமர்ந்து செய்வாள்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் என் கால்களிடையே சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்து டி.வி பார்ப்பது அவளுக்கு அதிகம் பிடிக்கும்.
ஹே அருண் அண்ணா எனக்காக போகோ சானல் மாத்த வேண்டாம். போனா போகட்டும் நான் சன் மியூசிக் பாக்கறேன் என்பாள் பெருந்தன்மையாக.

அவள் மிக அழகாகப் படம் வரைவாள். ஒரு குரங்கை வரைந்து அதன் அடியில் அருண் அண்ணா என்று எழுதி என்னிடம் ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டாள். மற்றொரு தடவை ஸ்கூல் போட்டியில் பரிசு வாங்கியதற்கு நான் அவளை சிட்டி செண்டர் அழைத்துச் சென்று அவள் விரும்பியவற்றையெல்லாம் வாங்கித் தந்தேன்.

தினமும் அவர்கள் வீட்டிலிருந்து காலை உணவும் இரவு டிபனும் வந்துவிடும்.
எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவளின் அம்மா உணவு கொடுத்தனுப்புவதை
நிறுத்தவில்லை. "என் பொண்ணுக்கு ஹோம்வொர்க்கெல்லாம் சொல்லித்தர்ற. நீயும்
தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறது நல்லதில்லப்பா,உனக்கும் சேர்த்து
சமைக்கிறதுல எந்த கஷ்டமும் கிடையாது இனி வேண்டாம்னு சொன்னா
ப்ரியாக்குட்டிகிட்ட சொல்லிகொடுத்திடுவேன்" என்னையும் குழந்தையாக
பாவித்தார் ப்ரியாவின் அம்மா.

அலுவலக எரிச்சல்களிலிருந்தும் நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்தும் என்னை
காப்பாற்றியது ப்ரியாவுடன் நானிருக்கும் தருணங்கள் மட்டும்தான். சில
நாட்கள் என் அறையிலேயே படுத்துறங்கி விடுவாள். தூக்கிச்சென்று அவள்
வீட்டில் விட்டுத்திரும்புவேன். மறுநாள் பெரிய மனுஷி போல பேசுவாள்
"அருண்னா நேத்து ரொம்ப டயர்டா இருந்துச்சா அதான் டி.வி பார்க்கும்போதே
தூங்கிட்டேன்".

குழந்தையின் உலகில் சிறகடித்து பறந்துகொண்டிருந்தோம்
நானும் ப்ரியாவும். வார இறுதியில் சினிமாவுக்கும்,கடற்கரைக்கும் தவறாமல்
ப்ரியாவை கூட்டிச்செல்வது பொழுதுபோக்கானது.

புதிதாக எனக்கே எனக்காக ஒரு வண்டி வாங்க ஆசைப்பட்டு ஒரு பல்ஸார் வாங்கினேன். முதல் முதல் என் செல்ல ப்ரியாக்குட்டியைத்தான் ஏற்றினேன். நாங்கள் இருவரும் முதலில் போனது மெரினா.அதன் பின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல். அன்றிரவு வீட்டுக்கு வரும் போதே தூங்கி வழிந்தாள்.

நான்கு மாதங்கள் கழிந்த சுவடே இல்லாமல் மறைந்துபோனது. ஒரு சனிக்கிழமை
காலை மாடிக்கு வந்தவள் "அண்ணா இன்னிக்கு ஸ்பென்சர் போலாமா? எனக்கு டிரெஸ்
எடுக்கணும்".
இருவரும் ஸ்பென்சர் பிளாசாவில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு அவளுக்கு
பச்சைக்கலரில் ப்ராக் ஒன்று எடுத்தோம். உடை வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளி
குதித்துக்கொண்டு வந்தாள்.

ஆளுக்கொரு பார்ப்கான் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த படிக்கட்டில்
உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான்
ப்ரியாவுக்கு இருமல் வந்தது. இரு முறை பலமாக இருமியவள் திடீரென்று ரத்தம்
கலந்து வாந்தியெடுத்தாள். பதறி அடித்து அவளை அள்ளிக்கொண்டு ஆட்ட
பிடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். போகும்
வழியிலேயே அவர்களது வீட்டிற்கு போன் செய்து விசயத்தை சொன்னேன்.
மருத்துவமனையின் வாசம் பதற்றத்தை அதிகப்படுத்தியது.

இருநாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துவிட்டு ப்ரியாவுடன்
மருத்துவமனையில் இருந்தேன்.
முதல் நாள் மாலை என்னை அருகில் அழைத்தாள் "அருண்னா உனக்கு நெக்ஸ்ட் வீக்
பெர்த்டே இல்ல..நான் நிறைய சார்ட் வாங்கி படம் வரஞ்சு வச்சிருக்கேன். என்
ரூம்ல பெட்டுக்கு அடியில இருக்கு மறக்காம எடுத்துக்குவியா"
"சரிம்மா நீ தூங்கு" என்று சொல்லிவிட்டு அவளது பிஞ்சுக்கரங்களை
பற்றிக்கொண்டேன். சூடாக இருந்தது அவள் உடல். அன்று மாலை அவளது வீட்டிற்கு சென்று எனக்காக அவள் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பார்த்தேன். சின்னஞ்சிறு பறவையொன்று மரத்தில் உட்கார்ந்திருப்பது போல மிக அழகாய் வரைந்திருந்தாள்.

மறுநாள் அவளது அம்மா என்னை தனியாக அழைத்துச்சென்று அந்த விசயத்தை சொன்னார்.
''அருண் ப்ரியாவோட அம்மா அப்பா உயிரோட இல்லப்பா. அவ குழந்தையா
இருக்கும்போதே இறந்துட்டாங்க. நாங்க அவளை தத்தெடுத்து வளர்க்கிறோம்."
பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் விழியோரம் கண்ணீர் துளிர்த்து
நின்றது. நான் எதுவும் பேசாமல் மெளனமாய் நின்றிருந்தேன். சிறிது இடைவெளி
விட்டு தொடர்ந்தார் "ப்ரியாவுக்கு கேன்சர். உன்கிட்ட சொன்னா
கஷ்டப்படுவேன்னுதான் சொல்லல. இன்னும் கொஞ்ச நாள்ல அவ நம்ம எல்லோரையும்
விட்டுட்டு.." அதற்கு மேல் பேசமுடியாமல் கேவி கேவி அழுதார்கள். தலையில்
இடி இறங்கியது போலிருந்தது எனக்கு. என் ப்ரியாக்குட்டிக்கு கேன்சரா?
சினிமாவில் மட்டுமே நடக்கின்ற விசயங்கள் என்று நான்
நினைத்திருந்தவையெல்லாம் என் வாழ்விலும் நடக்க வேண்டுமா? அதற்கு மேல்
அங்கு நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வந்தேன். என்னுடல் லேசான நடுக்கத்திலிருந்தது.

மருத்துவமனைக்கு எதிரே பிள்ளையார்கோவில் ஒன்றிருந்தது. இரண்டு மூன்று
பேர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று மண்டபத்தில்
அமர்ந்தேன். இருபதடி தூரத்தில் பிள்ளையார் சிலையாகி இருந்தார். ஏனோ
கடவுளை திட்டவேண்டும் போலிருந்தது. அழுகையும் கோபமும் கலந்து
வெடித்துச்சிதற ஆரம்பிக்கும் தருவாயில் செல்போன் அடித்தது. ப்ரியாக்குட்டி
என்னை பார்க்கவேண்டும் என்கிறாளாம். எழுந்து வேகமாய் ஓடினேன்.
மருத்துவமனையின் வரவேற்பரையில் அமர்ந்திருந்தவர்கள் வினோதமாய்
பார்த்தார்கள். அவளிருந்த அறைக்கதவை வேகமாய் திறந்துகொண்டு உள்ளே
வந்தேன். ப்ரியாவை சுற்றி அவளது அம்மா,அப்பா,பாட்டி,பக்கத்துவீட்டு உமா
அக்கா, பள்ளி ஆசிரியை பிருந்தா எல்லோரும் நின்றிருந்தார்கள். என்னைப்
பார்த்து சிரிக்கமுயன்று கொண்டிருந்தாள் ப்ரியா.


அருகில் சென்று கரம் பற்றினேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவள் முடியாமல் குழறி
"அருங்னா" என்றபோது அவளது உடல் குளிர்ந்திருப்பதை உணர்ந்தேன். சட்டென்று உடல் அதிர்ந்து மூச்சுவாங்க ஆரம்பித்தது. எல்லோரும் டாக்டரை அழைத்துவர
ஓடினார்கள். ப்ரியாகுட்டியின் கண்கள் என்னை ஒரு முறை தீர்க்கமாய்
பார்த்தன. டாக்டர் அனைவரையும் வெளியே போக சொன்னார். வெளியில் வந்து
அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தேன். ப்ரியா முதன் முதலாய் என் மீது
தண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் சென்று பழிப்பு காட்டி சிரித்தது
ஞாபகம் வந்தபோது சன்னல் வழியே பெயர்தெரியாத பறவையொன்று சிறகடித்து பறக்கும் சப்தம் கேட்டது.

Read More...

Thursday, December 25, 2008

காதல்கதைகள்: கதை 2

கருவிழி மீன்கள்:

லக்ஷ்மியின் கண்களை பற்றி சூர்யா பேசாத நாட்களே இல்லை எனலாம்.
என்னுடம் பணிபுரியும் சூர்யாவிற்கு லக்ஷ்மியை மூன்று வருடங்களாக தெரியும்.
இணையத்தில் யாஹூ சாட்டில்தான் இருவரும் சந்தித்தார்கள். மெல்ல வளர்ந்தது
நட்பு. மூன்று வருடங்கள் நச்சரித்தபின்,கடந்த மாதம்தான் லக்ஷ்மி அவளது
புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதை பார்த்த நாளிலிருந்து சூர்யாவுக்குள்
ஏற்பட்ட மாற்றத்திற்கு அளவே இல்லை.

அவளுக்கு எத்தனையோ மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தாலும் முதன் முதலாய்
காதல் கடிதம் எழுத தோன்றியபோது என்னிடம் வந்து புலம்பினான் சூர்யா.

"என்னமோ தெரியலடா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுட்டுது...இத்தனை நாளா
பிரண்டுன்னு சொல்லிட்டு இப்போ விரும்புறேன்னு சொன்னா தப்பா நினைச்சுக்குவாளோன்னு
பயமாவும் இருக்கு...பட் நவ் ஐம் இன் லவ் வித் ஹெர்...ப்ளீஸ் நீதான் கவிதை எல்லாம் எழுதுவ இல்ல
அவளுக்கு புடிக்கிற மாதிரி கவித்துவமா ஒரு லவ் லெட்டர் எழுதி தரணும்..." என்றான்.

"ஆளைவிடுடா காலேஜ்ல படிக்கிறப்போ இப்படித்தான் நண்பர்களுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்தே
என் வாழ்க்கை போச்சு...அதுமட்டுமில்லாம உன் காதலிக்கு நீதான் டா எழுதணும்"

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவன் கேட்கவில்லை. சரி எழுதி தருகிறேன் என்றதும் அவளது
புகைப்படத்தை தந்துவிட்டு சென்று விட்டான்.

கடிதமெழுத அமர்ந்தேன் நான்.

பூக்களின் சினேகிதியே,

மூன்று வருடங்களாய் என் உயிரில் கலந்துவிட்ட தோழி நீ. நான் விழும்போதெல்லாம் வார்த்தைதோள்
தந்த புனிதமானவள் நீ. இலையுதிர்காலத்திலும் நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சியாய் திகழும் உன்
நட்பில் திளைத்தவன் நான். உன்னோடு நான் பேசியதைவிட நம்மோடு நட்பு அதிகம் பேசியிருக்கிறது.
உன் குரல் கேட்காத பொழுதுகள் அனைத்தும் அனலாய் கொதிக்கின்றன. உச்சரிக்கப்படாத என்
வார்த்தைகளெல்லாம் உனக்குள் வீழ்ந்துகிடக்கின்றன. நட்பென்னும் கடற்கரையில் நாம் கட்டிய மணல்வீட்டை
இன்று காதலென்னும் அலைவந்து உடைத்தது நினைத்து புரியாத உணர்வுகளால் நெஞ்சு விம்முகிறது தோழி.
என் தோழன் என்கிற உனது எண்ணத்தில் கல்லெறிகிறது என் மனதில் புதிதாய் பூத்திருக்கும் நேசம். உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தைகளிலும் எனக்கான நட்பை மட்டுமே பார்த்து ரசித்து பழகிய இதயம் நட்பின் முனையில்
காதலை சுமந்து ஓடிவருகிறது உன் பின்னால். காயங்களால் நிரம்பிய என் பயணத்தில் நீ மட்டுமே வசந்தங்களை
பரிசளித்தாய். வாழ்க்கை முழுவதும் வசந்தமாக உன்னை வேண்டி நிற்கிறது மனசு.

இத்தனை நாட்கள் வராத காதல் இன்றெப்படி வந்தது எனக்குள்? உன் புகைப்படம் காணும் வரையில் தோழி என்று
மட்டுமே எண்ணிய என் இதயம் இப்பொழுது எப்படி காதலுக்குள் விழுந்து தத்தளிக்கிறது? உன் அழகில் மயங்கி நிற்கிறதா
என் உயிர்? இல்லை. உன் கண்களில் வழிகின்ற ப்ரியங்களை வாழ்வு முழுவதும் எனதாக்கி கொள்ளவே
விரும்புகிறது இந்த சுயநல மனம். என்னை மன்னித்துவிடு தோழி. உன்னிடம் எதையும் மறைத்ததில்லை இப்பொழுது
காதலையும்....

வண்ணமீன்களை பார்த்து ரசிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது மருத்துவம். உன் கருவிழி மீன்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதே என் தவம்.

என் விரல்பற்றி வெகுதூரம் நடக்கவேண்டும் என்பது உன்னுடைய நெடுநாள் விருப்பம். உன் விரல்பற்றி அக்னி சாட்சியாய்
உன்னை என்னில் பாதியாக்கி கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் லக்ஷ்மி. Yes I am in love with you.

உன் பதில் மடலுக்காக காத்திருக்கும்,
சூர்யா.

எழுதி முடித்தவுடன் சூர்யாவிற்கு அனுப்பினேன். ஒடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றி மச்சான் என்று போனவன்
மூன்று நாட்களாய் அலுவலகம் வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

மூன்று நாள் தாடியுடன் அலுவலகம் வந்த சூர்யா யாரிடமும் பேசவில்லை. அவனை அழைத்துக்கொண்டு
புல்வெளிக்கு சென்றேன். ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தோம். சிறிது நேர மெளனத்திற்கு பின் என்
பார்வை உணர்ந்து அவனாகவே பேச ஆரம்பித்தான்.

"நீ எழுதி கொடுத்த லவ் லெட்டரை அவளுக்கு அனுப்பிட்டு இரண்டு நாளா காத்திருந்தேன் டா... எப்பவும்
மெயில் அனுப்பிச்சா உடனே பதில் வந்திடும் பட் இரண்டு நாளாகியும் வரலைங்கறதால ரொம்ப துடிச்சிட்டேன்.
நேத்து மெயில் அனுப்பியிருந்தா... அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தமாம். அதை சொல்றதுக்காக
மெயில்பாக்ஸை திறந்தப்போதான் என்னோட மெயில் பாத்திருக்கா. இரண்டுநாளா என்னசொல்றதுன்னே
தெரியாம நேத்துதான் இந்த மெயிலை அனுப்பிச்சா" என்றபடி அவள் அனுப்பிய மடலை காண்பித்தான்.

"சூர்யா,

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.போலித்தனமற்ற உன் குறும்புபேச்சில் மனசு எப்பவும்
சிரிச்சுக்கிட்டே இருக்கும்.ஆனா காதலிக்கணும் உன்னையே திருமணம் செய்துக்கணும்ங்கற
எண்ணம் ஏனோ வந்ததே இல்லடா. யூ ஆர் மை பிரண்ட் பார்எவர்.. உன்னோட மெயிலை படிச்சுட்டு
என்னால எதுவுமே பண்ணமுடியலை. ஏன் தெரியுமா எனக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.
அதை சொல்றதுக்காகத்தான் உனக்கு மெயில் பண்ண வந்தேன்.பட்..... இட்ஸ் ஆல் ரைட் சூர்யா.
யாருக்கு யார்ங்கறது நம்ம கையில இல்ல.
எப்பொழுதும் சூரியன்போல் நீ பிரகாசிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

கண்ணீருடன் உன்
தோழி."

படித்துமுடித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விரக்தியான புன்னகையுடன் உடைந்த
குரலில் சொன்னான் சூர்யா " அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து எழுதி கொடுடா"

மழை தூறல்போட ஆரம்பித்தது.இருவரும் மெல்ல நடக்க
ஆரம்பித்தோம். என் தோளில் சாய்ந்தபடி மெளனமாய் நடந்துவந்தான் சூர்யா. அந்த மெளனத்திற்குள் கவிதையாய் மலர்ந்திருந்தாள்
லக்ஷ்மி.

-நிலாரசிகன்.

Read More...

Tuesday, December 23, 2008

காதல்கதைகள் - கதை 1

முன்கதைக்குறிப்பு:

[நான் கண்ட,கேட்ட காதல்கதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை அனைத்தும் நடந்த கதைகள்.
சற்று புனைவுடன் எழுதியிருக்கிறேன்,பெயர்கள் கற்பனையே]

சக்தியும்,ப்ரியம்வதாவும்:

பனி விழும் அதிகாலையில் இப்படித்தான் இந்தக்குட்டிக்கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று
நினைத்தேன். காரணம் ப்ரியம்வதாவை நினைத்து மெழுகுவர்த்திரியை ஏற்றி வைத்துக்கொண்டு
அழுதுகொண்டிருக்கும் சக்தியின் காதல் பனி விழும் அதிகாலை போல மிக அற்புதமானதுதான்.
ஆனால் என்னசெய்வது காதலில் பிரிவுதான் ஞானத்தை தருகிறது என்பதுபோல் சக்தி கொஞ்சநாட்களாக
தத்துவம் பேச ஆரம்பித்திருந்தான். ப்ரியம்வதாவின் பிரிவுதான் காரணம்.

சக்தி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளன். சிறுகதைகளில் அடுத்த ஜெ.கே இவன் தான் என்றார்கள் நண்பர்கள்.
அவனது ரசிகையாக அறிமுகமானாள் ப்ரியம்வதா. இருவரும் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான்
சந்தித்தார்கள்.

"எனக்கு உங்க கதைன்னா ரொம்ப இஷ்டம் சக்தி...ஐ ஜஸ்ட் லவ் இட்..எப்படி இவ்ளோ நல்லா எழுதறீங்க?" விழிகள் விரிய
கேட்டவளிடம் எழுத்தாளன் என்கிற சிறு கர்வத்துடன் பதில் சொன்னான் சக்தி.

"ரொம்ப சிம்பிள்ங்க...அதாவது பார்த்தீங்கன்னா..19ம் நூற்றாண்டின் இறுதியில புகழ்பெற்ற..... " ஏதேதோ சொல்லி அரைமணிநேரம்
பேசினான். அதன் பிறகு எஸ்.எம்.எஸும்,செல்லுமாக நட்பு மலர்ந்து காதலில் விழுந்தார்கள் இருவரும்.

ப்ரியம்வதாவும் இவனுக்காக கஷ்டப்பட்டு கவிதைகள் எழுதி அனுப்புவாள்

"நீ இல்லாவிட்டால் வானம் கறுக்கிறது மேகம் சிவக்கிறது வாழ்வின் அந்திவரை நீ வேண்டும் இல்லை மரணத்தை
முத்தமிடும் என் இதழ்கள்" என்று அவள் எழுதும் கவிதைகளை விட அதில் ஒளிந்திருக்கும் காதல் அழகாய் கண்சிமிட்டும்.

திடீரென்று ஒரு நாள் சக்திக்கு அவளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

"என் தம்பிக்கு நாம பழகறது பிடிக்கலை சக்தி. எனக்கும் மாப்பிள்ளை பார்க்கிறாங்க.
இனிமேல் என்கிட்ட பேசவோ,என்னை சந்திக்கவோ முயற்சிக்காத,குட்பை"

பித்துப்பிடித்தவன்போல் திரிந்தான் சக்தி. ப்ரியங்களால் வதைத்து சென்ற அந்த ப்ரியம்வதாவின் நினைவில்
தினம் தினம் துடித்தான். எழுதுவதை மொத்தமாக நிறுத்திவிட்டான். இப்பொழுதெல்லாம் எங்காவது தடதடக்கும்
ரயிலின் ஓசைகேட்டால் மட்டும் சக்தியின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

எனக்கு சக்தியை பார்க்க பாவமாக இருக்கிறது. காதலால் தன்னிலை இழந்தவர்களில் சக்தியும் ஒருவன்.
ப்ரியம்வதா யாரை வதைத்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.

-நிலாரசிகன்.

Read More...

Sunday, September 7, 2008

விதி - சிறுகதை

மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள்
ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும். முதல் முறையாக ஒரு
கொலை செய்யப்போகிறேன் என்கிற எண்ணமே உடலுக்குள் ஏதேதோ செய்தது. லேசாய்
உடம்பு சுட்டது. முதல் வகுப்பு ஏசியில் பயணித்தும் வியர்த்துக்கொண்டே
இருந்தது. இவை எதுவும் அறியாமல் என் தோளில் சாய்ந்துகொண்டு "ரீடர்ஸ்
டைஜஸ்ட்" படித்துக்கொண்டிருந்தாள் என் காதலி பூஜா.

எதிர் சீட்டில் இரு பெண்கள் ஒன்று நான் கொல்லப்போகும் ரேவதி. இன்னொருபெண்
பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவள் போலிருந்தாள். எலுமிச்சை நிறம்.
டிசர்ட்டில் தமிழ்ப்படுத்த முடியாத ஒரு ஆங்கில வாசகமிருந்தது. அவளை பற்றி
எதற்கு இப்போது? நான் கொலை செய்ய வேண்டியது ரேவதியை. காதில் ஐபோடை
மாட்டிக்கொண்டு,கண்கள் மூடி,ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பாடலை
ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது.
அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அது மாதிரி.

ரேவதி என்முன் வந்து அமர்ந்துபோது என்னை அடையாளம் கண்டுகொண்டு எவ்வித
பயமோ பதட்டமோ இல்லாமல் வெகு இயல்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு
பாடல்களில் மூழ்கிப்போனாள். பூஜாவிடம் ரேவதி என்னுடன் கல்லூரியில்
படித்தவள் என்று மட்டும் சொன்னேன். ரேவதியால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட
பூகம்பத்தை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. காரணம்,பூஜா என் காதலி. இந்த
இரண்டு வருடங்களாய் நான் சிரிப்பதற்கு காரணம் பூஜா. அதற்கு முன்பு நான்கு
வருடமாய் நான் அனுபவித்த சித்ரவதைக்கு காரணம் அப்பாவிபோல் என் முன்னால்
அமர்ந்திருக்கும் இந்த ரேவதிதான்.

ரேவதியும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். சென்னையிலிருக்கும்
மிகப்பிரபலமான கல்லூரியில்
முதலாம் ஆண்டு மாணவனாக கனவுகளுடன் சேர்ந்த முதல் வருடம் எவ்வித
பிரச்சினையுமின்றி கடந்துபோனது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளில்தான்
பிரச்சினை ஆரம்பமானது. எங்கள் பக்கத்து கல்லூரியின் சேர்மன் எலக்ஷனில்
ஏற்பட்ட அடிதடிக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள்தான் காரணம் என்று
உசுப்பிவிட்டதில் இருகல்லூரிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அப்போது கல்லூரிக்கு தன்னுடைய காரில் வந்துகொண்டிருந்த ரேவதியை
ஒருகூட்டம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. கார் கண்ணாடிகள் அடித்து
நொறுக்கப்பட்டது. ரேவதியின் அப்பா ஒரு கோடீஸ்வரர். தன்னுடைய பணபலத்தை
பயன்படுத்தி காரை நொறுக்கியவர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசனில்
நிறுத்தினார். சண்டையை வேடிக்கை பார்த்த நான் உட்பட.



இந்த அடிதடியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதை எவ்வளவோ
எடுத்துச்சொல்லியும் யாரும் கேட்பதாயில்லை. பிடிபட்ட மாணவர்கள் தங்கள்
பின்புலத்தால் வெளிவந்துவிட்டனர். அநாதையாய் மாட்டிக்கொண்டவன் நான்
மட்டும். 15 நாட்கள் காவலில் வைத்துவிட்டு அனுப்பினார்கள். என்னை
அவமானபடுத்திய ரேவதியை பழிவாங்க நினைத்து அவள் ஜிம்மிலிருந்து கார்
நோக்கி போகும்போது ஆசிட் பாட்டிலை அவள் மீது எறிந்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் ஓடிவிட்டேன். மறுநாள் போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு
போய் வாயில் நுரைதள்ளும் வரை அடித்தார்கள். ஒவ்வொரு அடிவிழும்போதும்
அவள் முகம் எவ்வளவு கோரமாய் மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டே வலியை
பொறுத்துக்கொண்டேன்.

கொலை முயற்சி வழக்கில் என்னை கைது செய்து புழல் சிறையில் நான்கு வருடம்
அடைத்தார்கள். மனம் கல்லாகி இருந்தது. ஆனாலும் ஒரே திருப்தி ரேவதியின்
கோரமுகம் மட்டும்தான். கொஞ்ச நாளில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் சொன்ன
செய்தி கேட்டு மனம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. ரேவதியின் முகத்தை
நோக்கி நான் வீசிய ஆசிட் தவறுதலாக அவள் கையில் பட்டிருக்கிறது. சிறிய
காயத்துடன் தப்பிவிட்டாள். நான்கு வருடமாய் வன்மத்துடன் ஜெயில் கம்பிகளை
எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஜெயிலை விட்டு வெளியே வந்தவுடன் எவ்வளவோ தேடியும் ரேவதியை கண்டு
பிடிக்கமுடியவில்லை. ஏதோ வெளியூருக்கு போய் விட்டதா சொன்னார்கள்.
படிப்பும் இல்லாமல் ஜெயில் சென்று வந்தவன் என்கிற பட்டத்துடன் சென்னையில்
வேலைதேட விரும்பவில்லை. திருட்டு ரயிலேறி மும்பை வந்து ஒரு ஹோட்டலில்
வேலைக்கு சேர்ந்து, வாழ்க்கை திசைமாறி போனது.

ஹோட்டலுக்கு எதிரே இருந்த பெண்கள் கல்லூரியில் தான் பூஜா
படித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதம் கஷ்டப்பட்டு அவளை கவர்ந்து என்
காதலியாக்கியது அவள்மீதுள்ள காதல் மட்டுமல்ல.சென்னையில் அவள் அப்பா
வைத்திருக்கும் ஜுவல்லரி மீது கொண்ட காதலும்தான்.

"தூக்கம் வருது நவீன்…தூங்கலாமா?" பூஜாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு
கொண்டுவந்தது. பூஜா அழகிய மஞ்சள் நிற நைட்டிக்கு மாறியிருந்தாள். மற்ற
இரு பெண்களும் நைட்டிக்கு மாறியிருந்தனர்.
நானும் பூஜாவும் லோயர் பெர்த்தில் படுத்துக்கொண்டோம். எனக்கு நேர் மேலே
உள்ள பெர்த்தில் ரேவதியும், பூஜாவுக்கு மேலே உள்ள பெர்த்தில் அந்த
கல்லூரி பெண்ணும் படுத்துக்கொண்டனர்.

மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. இரயிலில் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.
எல்லோரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். எப்படி ரேவதியை ரயிலைவிட்டு
தள்ளுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை மாற்றி எழுதிய இந்த
சண்டாளியை எப்படி கொல்வது? யோசித்தபடியே படுத்திருந்தேன் ஏசியின்
குளிரில் மெல்ல உறங்கிப்போனேன்.

திடுக்கிட்டு விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. சே கொலை
செய்ய போகும் நேரத்திலும் எனக்கு தூக்கம் வருகிறதே? இப்பவே புரொபஷனல்
கில்லராக மாறிவிட்டேனா? சீக்கிரம் காரியத்தை முடிக்கவேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தபோது ரேவதி பாத்ரூம் நோக்கி நடந்தாள். இதுதான்
சரியான தருணம். சட்டென்று எழுந்தேன். விளக்கில்லாமல் இருள்
கவிந்திருந்தது. அடிமேல் அடியெடுத்துவைத்து மெல்ல சென்று ரயிலின் கதவை
திறந்து வைத்துக்கொண்டு கதவருகே ரேவதிக்காக காத்திருந்தேன்.
பாத்ரூமிலிருந்து டவலால் முகம் துடைத்துக்கொண்டே வந்தவளை சட்டென்று கதவை நோக்கி வேகமாக தள்ளினேன்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து ரயிலுக்கு வெளியே விழுந்தவளின்
அலறல்சத்தம் காற்றில் கலந்து மறைந்தது.

இத்தனை வருடமாய் இதற்காகத்தானே காத்திருந்தேன். இனி என் பூஜா என்
ஜுவல்லரி. கதவை மெதுவாய் மூடிவிட்டு சீட்டுக்கு வந்து உட்காரும்போதுதான்
கவனித்தேன்…பூஜாவைக் காணவில்லை! ஓடிச்சென்று பாத்ரூமிலும் தேடினேன்.
எங்குமில்லை என் பூஜா. அப்படியெனில்…நான் தள்ளியது பூஜாவையா? அய்யோ ஏன்
எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. இனி நான் மட்டும் இருந்து என்ன
ஆகிவிடப்போகிறது? பூஜா நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் ஓடிச்சென்று
கதவைத் திறந்து குதித்துவிட்டேன்.

ஒரு முட்புதரில் பொத்தென்று விழுந்ததில் எலும்புகள் நொறுங்கியிருக்கவேண்டும்..உயிர் போகும் வலியுடன்,எங்கிருக்கிறேன் என்கிற
உணர்வு குறைய ஆரம்பித்தபோது காதிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது.

இரவு பத்து மணிக்கு நான் உறங்கிய பின்னர் குளிர் தாங்க முடியாமல்
பூஜாவிற்கு மேலுள்ள பெர்த்தில் படுத்திருந்த அந்தக் கல்லூரி பெண் பூஜா
இடத்திற்கும் பூஜா அவள் இடத்திற்கும் மாறியதோ, பாத்ரூம் போனது ரேவதி
என்று நினைத்து அந்த கல்லூரி பெண்ணை நான் தள்ளிவிட்டதோ, கீழே விழுந்தவள்
ரயில் பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து கரை நோக்கி
நீந்தியதோ அறியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் ரேவதி. இவை எதைப் பற்றிய
கவலையுமின்றி சென்னை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த நீள ரயில்.

Read More...