கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். தலைப்பாகைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து குலுக்கிப்பார்த்து திறந்தபோது உள்ளே ஒரே ஒரு உடைந்த தீக்குச்சி மட்டுமே இருந்தது. தீப்பெட்டியை தூர எறிந்துவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த முதியவரை வழிமறித்தான்.
"நெருப்பு இருக்கா பெருசு?" கையில் அரிவாளுடன் நெருப்பு கேட்டால் யாருக்குத்தான் பயம் வராது? அதுவும் கண்கள் இரண்டும் சிவந்து உக்கிரத்துடன் அரை பனைமர உயரத்தில் ஒருவன் கேட்டால் குலைநடுங்காமல் என்ன செய்யும்? தீப்பெட்டியை கொடுக்கும் போது கை நடுங்கியது பெரியவருக்கு. பீடிக்கு நெருப்பு வைத்துவிட்டு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்கும்போது "இன்னைக்கு இந்த பீடி எரியுற மாதிரி நாளைக்கு எம் பொஞ்சாதி எரிவா" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் கந்தசாமி. ஒன்றும் புரியாமல் நகர்ந்து சென்றார் பெரியவர்.
மனதிற்குள் பல கேள்விகள் இருந்தாலும் தன்னுடன் வேலை செய்யும் இருளப்பன் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் கந்தசாமியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"என்ன கந்தா ஒம் பொஞ்சாதி அடிக்கடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூமுக்கு போயிட்டு வர்றா? காலம் கெட்டு கெடக்குது அவ்வளவுதான் சொல்லுவேன்"
இருளப்பன் வைத்த தீ கந்தசாமியின் கண்களில் தெரிந்தது.
நடையின் வேகத்தை கூட்டினான். அரிவாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்திருந்தது கந்தசாமியின் வலதுகை. இவனுடைய வேகத்தைக் கண்டு
ஊர்க்கோடியில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வெட்டியான் "ஊருக்குள்ள இன்னைக்கி ஒரு பொணம் விழுதுடோய்" என்று சந்தோஷமாக சங்கில் படிந்திருந்த தூசியை பழைய துணியால் துடைக்க ஆரம்பித்தான்.
கந்தசாமியின் அக்காள் மகள்தான் காமாட்சி. கட்டினால் மாமாவைத்தான் கட்டுவேனென்று ஒத்தைக்காலில் நின்று கந்தசாமியை திருமணம் செய்துகொண்டவள். அவளா இப்படி? இருளப்பன் முதலில் சொன்னபோது நம்பாமல் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு போய்விட்டான் கந்தசாமி.
ஆனாலும் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக தினமும் இரு முறை தோட்டத்திற்கு காமாட்சி போகவேண்டும். அதுவும் இந்த கருக்கல் நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனக்குள் இருந்த சந்தேக மிருகம் மெல்ல வளர்ந்து பெரு உருவமாய் காட்சியளிக்க ஆரம்பித்தவுடன் குடிசைக்கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
போன மாதம் நிறைமாத கர்ப்பிணியாக காமாட்சி இருந்தபோது இருந்த சந்தோசமும், இறந்தே குழந்தை பிறந்ததை தயக்கத்தோடும் கண்ணீரோடும் காமாட்சியிடம் சொன்னபோது கொஞ்ச நேரம் ஓவென்று அழுதவள் பின்னர் இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு "நீங்கதான் மாமா எனக்கு கொழந்த எல்லாமே" என்று அவள் உருகியபோது அடைந்த சந்தோஷமும் இப்போது அவளை வெட்டி எறிய போகின்ற நேரத்தில் கந்தசாமிக்கு நினைவுக்கு வந்தன.
தான் வேலைசெய்யும் தோட்டத்தின் முதலாளி நல்லவர்தான் ஆனால் அவரது மகன் தான் சரியில்லை என்பது கந்தசாமியின் நெடுநாளைய எண்ணம். வெளிநாட்டில் படித்தவன் என்பதால் எப்போதும் "டிப்-டாப்" ஆசாமியாக உலா வந்த முதலாளியின் மகனை ஊரிலுள்ள இளவட்ட பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்பிளந்தார்கள். போன வாரம்கூட முதலாளியின் வீட்டுவேலைக்கு காமாட்சி போய்வரும்போது கையில் பெரிய பெளடர் டப்பா ஒன்றை கொண்டுவந்தாள். "பாரு மாமா எவ்ளோ வாசமா இருக்கு, நம்ம சின்ன மொதலாளி தந்தாக" வெள்ளந்தியாக அவள் சொன்னதை அன்று இவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இத்தனைநாட்கள் தன்னை முட்டாளாக்கிவிட்டாளே அந்த பாதகி என்று கருவிக்கொண்டே தோட்டத்தை வந்தடைந்தான் கந்தசாமி. தூரத்தில் மோட்டார் ரூம் தெரிந்தது. அதற்குள்தானே இருக்கிறார்கள் இருவரும்? பெளடர் கொடுத்து மயக்கிய முதலாளியின் மகனின் தலையை இரண்டாக பிளக்காமல் இந்த அரிவாள் கீழே இறங்காது..வரப்பில் விறுவிறுவென்று நடந்து மோட்டார் ரூம் நோக்கி முன்னேறினான்.
மோட்டார் ரூமின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சேற்றுக் காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் அந்த தகரக் கதவு படாரென்று திறந்துகொண்டது. சுவர்பக்கம் திரும்பி தன் ஆடையை சரிசெய்து கொண்டிருந்த காமாட்சி கதவு திறந்த சத்தத்தில் வெடுக்கென்று திரும்பி பார்த்தாள். கையில் அரிவாளும் கண்களில் வெறியுடனும் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தவுடன் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டாள் காமாட்சி. பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள்.
"என்னை மன்னிச்சுடு மாமா. உனக்கு தெரியாம இங்க வந்தது எந்தப்புதான். நம்ம குழந்த செத்தே பொறந்ததால மாரு கட்டி வலி எடுக்கும்போதெல்லாம்
வீட்டு புறவாசல் பக்கத்துல நின்னு தாய்ப்பாலை பீச்சி வெளியேத்துவேன். அப்போதான் ஒரு தெருநாய் நம்ம வீட்டு வேலிக்கு பக்கத்துல ஆறு குட்டி போட்டிருக்கறது தெரிஞ்சது.
போன வாரம் கார்பரேசன் கார படுபாவிங்க அந்த தெருநாயயும் நாலு குட்டிகளையும் பிடிச்சிட்டு போயிட்டாங்க. பஞ்சாரத்துக்குள்ள ரெண்டு குட்டிங்க கிடந்ததால இந்த ரெண்டும் தப்பிச்சிடுச்சி. உனக்குதான் நாய்,பூனையெல்லாம் பிடிக்காதே. அதனாலதான் குட்டிகளை கொண்டு வந்து இந்த மோட்டார் ரூமுல வச்சிருக்கேன். வீணா போற தாய்ப்பாலை இந்த குட்டிங்க ரெண்டும் குடிக்கிறத பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? அங்க பாரு மாமா" கடகடவென்று பேசிவிட்டு அந்த சிறிய அறையின் மூலையை நோக்கி கைகாட்டினாள் காமாட்சி.
சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில் இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.
புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.
Read More...
Collapse...

1.
அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது.கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா.பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.
என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள்
என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?
"என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?" நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. "ஒண்ணுமில்ல நதி...சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?" அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.
"ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்" என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.
மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.
2.
அப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.
வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.
ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.
மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன்.கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது.என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.
3.

மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.
ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.
கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.
நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?
4.
அன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.
அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.
என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.
மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.
5.
கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது.கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.
மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.
நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.
கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும்.இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.
தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.
அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.
-நிலாரசிகன்.
Read More...
Collapse...

பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணா” பேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
“அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவ” சொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.
திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.
சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சே” இடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.
அப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.
நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?
ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே "இனி அங்க வெளயாட போகாத தம்பி" என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.
இரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.
வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி,நந்தியாவட்டை,இருவாச்சி,ஜினியா,வாடாமல்லி,ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.
நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.
-நிலாரசிகன்.
Read More...
Collapse...
துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.
சம்யுக்தையின் வருகை:
வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.
மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.
அவன்,அவள்,அவர்கள்:
தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.
மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.
அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.
அவனது மெழுகுவர்த்திரி:
காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.
அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.
சம்யுக்தையின் நீங்குதல்:
பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.
அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.
அவன்,நான்,மரணம்:
நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.
அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.
துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..
-நிலாரசிகன்.
Read More...
Collapse...
அப்பா சொன்ன நரிக்கதை
("சிறு"கதை)
1.
இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக
அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு
சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு
தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.
அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்
ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.
எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான்.
அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
2.
"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா"
ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.
"யெஸ்"
"உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்"
இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு
திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில்
அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.
நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.
3.
அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே
இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது,அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.
சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.
தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.
Read More...
Collapse...

முன்குறிப்பு:
இந்தப் பதிவு சிறுகதைகள் மீது ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கும் ஆரம்பநிலை வாசக/எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சிறுகதைகளில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் Just close this window :)
உரையாடல் சிறுகதை போட்டி நடந்த பின்பு பலரது கவனம் சிறுகதைகளின் மீது திரும்பி இருக்கிறது.சிறுகதைகளை தேடி படிக்கும்
வலைப்பதிவு நண்பர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சிறுகதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில் தேடித்தேடி படித்த பல கதைகள் எப்போதும்
மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொழுதில் அவை என்னுடன் உரையாடுகின்றன.சமயங்களில் சிறுகதையில் வாழும்
கதாபாத்திரங்களுடன் நாமும் பேசுகிறோம்/சிரிக்கிறோம்/அழுகிறோம்...இன்னும் பல "றோம்".
நான் வாசித்து நேசித்த சிறுகதைகளின் பட்டியல் இது.சிறுகதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். (சுட்டி கொடுக்க வில்லை,கதையின் தலைப்பை மட்டும் வைத்து சிறுகதைகளை தேடிப்பிடித்து வாசிக்கும் அனுபவம் அலாதியானது என்பதால்,மன்னிக்க!)
கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
காகங்கள் - சுந்தர ராமசாமி
எண்ணப்படும்(வார்த்தை இதழில் வெளியானது) - நாஞ்சில் நாடன்
செப்டிக் - சிவசங்கரி
பத்மவியூகம் - ஜெயமோகன்
புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
யாருமற்ற இரவு(உயிரோசை இணைய இதழில் வெளியானது) - உமா ஷக்தி
நூற்றி சொச்ச நண்பர்கள் - யுவன் சந்திரசேகர்
ஊர்வாய் (மயில் ராவணன் சிறுகதை தொகுப்பு) - மு.ஷரிகிருஷ்ணன்
சாட்டை(மணல்வீடு இதழில் வெளியானது) - கண்மணி குணசேகரன்
ஆண்கள் விடுதி அறை எண் 12 - திருச்செந்தாழை
கோடம்பாக்கம் - சாரு நிவேதிதா
காதுகள் - எழுதியவர் பெயர் நினைவில் இல்லை - ஆனந்தவிகடனில் வெளியானது
வெள்ளி மீன் - பெருமாள் முருகன்
ஆண்கள் படித்துறை - ஜே.பி.சாணக்யா
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
கடிதம் - திலீப்குமார்
ஆகாயம்,நகரம்,ஆண்மை - சுஜாதா
கச்சை,சர்ப்ப வாசனை(புனைவின் நிழல் தொகுப்பு) - மனோஜ்
மதனிமார்கள் கதை - கோணங்கி
கன்னிமை - கி.ரா
தனுமை,தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
எஸ்தர் - வண்ணநிலவன்
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன - எஸ்.ராமகிருஷ்ணன்
புலிக்கலைஞன் - அசோகமித்ரன்
அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
மாடுகள் - இமையம்
கடல் - பாவண்ணன்
அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
மரப்பாச்சி,அரளிவனம் - உமா மகேஸ்வரி
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
சைக்கிள்,அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
நடன விநாயகர் - சூடாமணி
சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்
வெயிலோடு போய் - தமிழ்செல்வன்
காடு - பா.செயப்பிரகாசம்
உயிரிடம் - அழகிய பெரியவன்
அமெரிக்காக்காரி - அ.முத்துலிங்கம்
வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
அழுவாச்சி வருதுங் சாமி - வாமு.கோமு
Extras:
மேலே பட்டியலில் உள்ளவை என் நினைவில் நிற்பவை மட்டுமே. மேலும் பிடித்த பல சிறுகதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.கதையின் தலைப்பு மறந்துவிட்டது.
இப்பதிவு எழுத அ.மு.செய்யதுவின் இந்தப் பதிவு மிக முக்கியகாரணம். அவருக்கு நன்றி.
சில சிறுகதை தொகுப்புகள் பற்றி நான் எழுதிய பழைய பதிவு இங்கே
தண்டம் - பூங்காற்று தனசேகர் எழுதிய சிறுகதை தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பல மாதங்களாக தேடுகிறேன்.
உங்களுக்கு பிடித்த கதைகளை பின்னூட்டமிடுங்கள்.
நன்றிகள் பல :)
Read More...
Collapse...

சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்.அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.
எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.
கவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது
உன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.
உலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும்
நாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி?
நட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும்
சிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.
வெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.
நானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.
அவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா? நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.
அதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.
பெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.
அன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.
என்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.
இறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.
ஆர்வமும்,பதைபதைப்பும் என்னை தொற்றிக்கொண்டன.
அவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.
“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.
காதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா? என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.
குமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை...இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.
ஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.
நீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா? புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.
என் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.
டியர் சிவா,
மிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.
குமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.
ப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.
-காவ்யா.
என் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது."ஹலோ சிவா" ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் "வதா,நானே உன்னை பார்க்க வரலாம்ணு" நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் "சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்றாள்.
-நிலாரசிகன்
Read More...
Collapse...